திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு மாநிலங்களவைத் தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கடந்த டிச. 14 ஆம் தேதி அமளியில் ஈடுபட்டார்.
இதையடுத்து, மாநிலங்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அவை நடவடிக்கையை சீர்குலைத்ததாக டெரிக் பிரயானை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு மாநிலங்களவைத் தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக கவனத்தை ஈர்க்கவே முயற்சி செய்தார் என்றும் அதனால் இது நியாயமான கோரிக்கை என்பதால் அவரது இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக மக்களவையிலும் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 15 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | தென் தமிழகத்தின் 19 ரயில்கள் ரத்து! முழு விவரம்