மழை பாதிப்பின்போது முதல்வர் எங்கே இருந்தார்? மத்திய நிதியமைச்சர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்கே இருந்தார்? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நிர்மலா சீதாராமன் | பிடிஐ
நிர்மலா சீதாராமன் | பிடிஐ


புது தில்லி: தென் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் கொடுத்து, அதிகனமழை பெய்தபோது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்கே இருந்தார்? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், அவர் இந்தியா கூட்டணியில் பங்கேற்க புது தில்லி வந்து, இரவு, சாவகாசமாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டுச் சென்றார். இதன் மூலம், மு.க. ஸ்டாலின் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது மக்களுக்குத் தெரிந்திருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை குறித்து முன்னெச்சரிக்கை கிடைக்கவில்லை என்பது தவறு. டிசம்பர் 12ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியிருந்தது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க மத்திய அரசு என்ன செய்தது என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று டிசம்பர் 12ஆம் தேதி முதல் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மழை பாதித்த அன்றும், 3 மணி நேரத்துக்கு ஒரு முறை பதிவு செய்யப்பட்டது. இன்ச் பை இன்ச் எவ்வளவு மழை பெய்யும் என்று சொல்ல முடியாது. கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுத்த பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்தது ஏன்? பாதித்த இடங்களுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் தாமதமாகவே சென்றனர். மழை, வெள்ள பாதிப்பிலிருந்து தமிழக அரசு என்ன கற்றுக்கொண்டது. தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது. மாநில அரசு என்ன செய்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக செலவு சேய்த ரூ.4,000 கோடி எங்கேப் போனது? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை ஆய்வு மையம் மீது குறைகூறுவது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

முன்னதாகப் பேசிய அவர், தென் மாவட்டங்களில் வெள்ளம் வடிவதற்கு முன்பாகவே, பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் இறங்கினர்.  பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் இறங்குவதற்கு முன்பு, தமிழக அதிகாரிகள் ஒருவர் கூட அங்கு இல்லை. இந்த ஆண்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி ரூ.900 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே வழங்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com