புதுதில்லி: நாட்டில் கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புதிய வகை கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் மே 21 முதல் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 752 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், 3,420 பேர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.50 கோடி ஆகவும், கேரளத்தில் 2, ராஜஸ்தான்,கர்நாடகத்தில் தலா ஒருவர் என
மொத்தம் 4 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,71,212 ஆகவும், தேசிய மீட்பு விகிதம் 98.81 சதவிகிதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவிகிதமாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புதிய வகை கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க | கராச்சி வந்தடைந்த ரயிலில் வெடிகுண்டு!
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாவது:
கேரளம் போன்ற மாநிலங்களில் புதிய வகை கரோனை நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசு மருந்துவமனைகளில் கரோனா தடுப்பு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகள் கட்டாயம் முகக்கவசம் அனிய வேண்டும்.
வென்டிலேட்டர், ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.