ஹரியாணாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மல்யுத்த வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷண் சிங்கின் ஆதரவாளர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவ் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், ஹரியாணா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள மல்யுத்த வீரர்கள் பயிற்சி கூடத்துக்கு சென்றார்.
அங்கு பயிற்சி பெறும் மல்யுத்த வீரர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது பஜ்ரங் புனியாவும் உடனிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பஜ்ரங் புனியா கூறியதாவது, “மல்யுத்த வீரர்களின் வழக்கமான பயிற்சியை காண ராகுல் காந்தி வருகை தந்தார். அவரும் மல்யுத்தம் செய்தார்.” என்று தெரிவித்தார்.