மகாராஷ்டிரத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இன்றும் கண்டறியப்படவில்லை. தீவிபத்தின் போது 10-15 தொழிலாளர்கள் கட்டிடத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்ததாக தொழிலாளர்களில் ஒருவர் கூறினார். தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது, "அதிகாலை 2:15 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது.
நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. ஆறு பேர் உள்ளே சிக்கியிருப்பதாக உள்ளூர்வாசிகள் எங்களுக்குத் தெரிவித்தனர். எங்கள் அதிகாரிகள் உள்ளே நுழைந்து ஆறு பேரின் உடல்களை மீட்டனர் என்றார்.