/

கடவுள் ராமரின் மீது யாரும் காப்புரிமை கோர முடியாது: உதித் ராஜ்

கடவுள் ராமருக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என்று காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார். 

News image
உதித் ராஜ் (கோப்புப்படம்)
Updated On :6 பிப்ரவரி 2024, 1:34 pm

DIN

கடவுள் ராமருக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என்று காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பாஜகவைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதற்கு அவர்கள் யார்? கடவுள் ராமரின் மீது பாஜக காப்புரிமை பெற்று வைத்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பீர்களா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று பாஜகவினர் பதிலளிக்கிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு ராம ஜன்மபூமி அறக்கட்டளைதான் அழைப்பு விடுக்கும் என்று கூறப்பட்டது. அந்த அறக்கட்டளை யாருடையது? அதற்கும் பாஜகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையா?

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா பின்தங்கிய நாடாக மாற்றப்படும். எனது வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சில முதலாளிகளின் சொத்து மதிப்பு மட்டும் உயருமே தவிர, ஒட்டுமொத்த மக்களின் தனிநபர் வருமானம் குறையும். நமது நாடு ஆப்பிரிக்க நாடுகளின் ஒப்பிடப்படும். கடவுள் ராமரின் மீது யாரும் காப்புரிமை கோர முடியாது.” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஒருநாள் பயணமாக அயோத்திக்கு சனிக்கிழமையன்று சென்ற பிரதமர் மோடி ரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஜனவரி 14 முதல் ஜனவரி 22ம் தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து யாத்திரைத் தலங்கள் மற்றும் கோயில்களில் தூய்மைப் பிரச்சாரங்களைத் தொடங்குமாறு அவர் வலியுறுத்தினார்.

அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஜனவரி 16-ம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் நடைபெறும் என்று கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.