சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராமனுக்கு, தன்னிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழும் மனைவியின் மின்னஞ்சலை ஹேக் செய்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், கடந்த 2015ஆம் ஆண்டு சீதா - ராமன் இருவருக்கும் திருச்சியில் திருமணம் முடிந்தது. திருமணத்துக்குப் பிறகுதான் ராமன் குடும்பத்தாருக்கு ரூ.10 கோடி அளவுக்கு கடன் இருப்பது சீதாவுக்கு தெரிய வந்தது. இருவரும் கோவைக்கு குடிபெயர்ந்து 2016ஆம் ஆண்டு கார் உதிரிபாக விற்பனையகத்தை ராமன் தொடங்கியிருக்கிறார்.
இவர்களுக்கு 2017ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. பிறகு இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 2018ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுவிட்டனர்.
விவகாரத்து மனு தாக்கல் செய்த சில நாள்களிலேயே சீதாவின் மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டது. இது குறித்து சீதா சைபர் பிரிவுக்கு புகார் அளித்தார். விசாரணை செய்த காவல்துறையினர், சீதாவின் மின்னஞ்சலை ஹேக் செய்த செல்லிடப்பேசி எண்ணை கணவர் ராமன் பயன்படுத்தியிருப்பதை கண்டறிந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
கணவன் - மனைவியாக வாழ்ந்த போது, தனது மின்னஞ்சல் கடவுச் சொல் கணவருக்குத் தெரியும் என்றும், பிரிந்துவிட்ட நிலையில், அதனை மாற்றியதாகவும், ஆனால் மற்ற விவரங்களை வைத்து தனது மின்னஞ்சலை அவர் ஹேக் செய்ததாக மனைவி குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்தி நீதிபதி, ராமனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சாட்சியகங்களையும் ஏற்றுக் கொண்டனர். உத்தரவில், கணவன் - மனைவியாக வாழும் போதும் குற்றவாளி, மனைவியை துன்புறுத்தியிருக்கிறார். பிரிந்த பிறகு, அவர் நிம்மதியாக வாழட்டும் என்று விடாமல், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறியவும் அவரது மனதை காயப்படுத்தவும் செய்திருக்கிறார். குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று குற்றவாளி தரப்பில் கோருவதை ஏற்க முடியாது என்று கூறி, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.