புதுதில்லி: காங்கிரஸ் கட்சியின் நிரந்தர நிர்வாகிகள் பதவிகளில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான செயல்திட்டங்களை கட்சியின் செயற்குழு அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சியின் புதிய தலைவராக கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி நிரந்தர நிர்வாகிகளாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை நியமனம் செய்ய அக்கட்சியின் செயற்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் மாநாடு ராய்ப்பூரில் பிப்ரவரி 24 முதல் 26 ஆம் தேதி வரை நடத்துவதற்கு கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இந்த மாநாட்டின்போது கட்சியின் தலைவராக அடுத்த 5 ஆண்டுகள் கார்கேவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாநாட்டின் போது செயற்குழு தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த உள்கட்சி தேர்தலில் சோனியாவும், ராகுலும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
அதே நேரத்தில், சோனியா காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியிருந்தாலும், கட்சியின் முக்கிய உறுப்பினர்களாகவே உள்ளனர்.
கட்சியின் முக்கிய முடிவுகள், உயர்மட்ட தலைவர்கள் என்ற நிலையில் உள்ளவர்களுடன் கலந்தாலோசித்து எடுக்கப்படுவதாக தெரிகிறது.
இந்லையில், அவர்களை கட்சியின் நிரந்த நிர்வாகிகள் பதவிகளில் நியமனம் செய்ய செயற்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான அறிவிப்பு மாநாட்டின்போது வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான செயல்திட்டங்களை காரியக் கமிட்டி நிர்வாகிகள் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகில இந்திய காங்கிரஸ் மாநாடு குறித்து கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், “இந்த 3 நாள் மாநாட்டில் அரசியல், பொருளாதாரம், சர்வதேச விவகாரங்கள், விவசாயம் மற்றும் விவசாயிகள், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விவாதிக்கப்படும்.
அப்போது செயற்குழு தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும். இந்த விவகாரத்தில் கட்சி வியூகம் வகுத்த பின், மாநாட்டு தீர்மானங்கள் வெளியிடப்படும்,'' என்று கூறினார்.