இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இன்று தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ(இந்திய ஒற்றுமை) நடைப்பயணம் 116வது நாளான இன்று ஹரியாணாவில் நிறைவடைந்து, பஞ்சாப் மாநிலத்திற்குள் இன்று நுழைகிறது.
பஞ்சாப் மாநிலத்திற்குள் நடைப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தரிசனம் செய்தனர்.
பொற்கோயிலுக்குச் சென்ற ராகுல் காந்தி, காவி நிற தலைப்பாகை அணிந்துச் சென்று பூஜைகளிலும் கலந்துகொண்டார்.
செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணமானது கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களை கடந்துள்ளது.
தற்போது பஞ்சாப்பிலிருந்து காஷ்மீருக்கு செல்லும் நடைப்பயணம் ஸ்ரீநகரில் ஜனவரி 30-ஆம் தேதி தேசிய கொடியேற்றத்துடன் நிறைவுபெறுகிறது.