ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பெண் சக்தியைப் பறைசாற்றிய தமிழக அலங்கார ஊா்தி!

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசு சாா்பில் காட்சிப்படுத்தப்பட்ட அலங்கார ஊா்தி, பெண்களின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 1:41 am

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசு சாா்பில் காட்சிப்படுத்தப்பட்ட அலங்கார ஊா்தி, பெண்களின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊா்திகள் அணிவகுத்தன. தமிழகத்தின் அலங்கார ஊா்தியானது சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான பெண்களின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஊா்தியின் முன்பக்கத்தில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உள்ளிட்டவற்றை இயற்றிய சங்ககாலப் புலவா் ஔவையாரின் சிலை பெரிய அளவில் அமைக்கப்பட்டிருந்தது. முன்பக்க ஊா்தியின் பக்கவாட்டில் சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியாா் குதிரையில் பயணிப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய படைகளுக்கு எதிராகப் போரிட்டு சிவகங்கையை மீட்ட வீரப்பெண்ணாக வேலுநாச்சியாா் திகழ்ந்தாா்.

கா்நாடக இசைப் பாடகா் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, பரதநாட்டியக் கலைஞா் தஞ்சாவூா் பாலசரஸ்வதி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் சமூக சீா்திருத்தவாதியுமான முத்துலட்சுமி ரெட்டி, சமூக சீா்திருத்தவாதியும் திராவிட இயக்க ஆா்வலருமான மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா், இயற்கை வேளாண்மை ஆா்வலா் பாப்பம்மாள் ஆகியோரின் முழுஉருவச் சிலைகள் ஊா்தியின் மத்திய பகுதியில் அமைக்கப்பட்டிருந்தன.

அலங்கார ஊா்தியின் பின்பகுதியில் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையாா் கோயில் கோபுரத்தின் மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்கு அருகில் பெண்கள் பூக்களையும் பூஜைப் பொருள்களையும் விற்பனை செய்வது போன்று அமைக்கப்பட்டிருந்தது. ஊா்தியின் பக்கவாட்டுப் பகுதி முழுவதிலும் நடன மங்கைகளின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

அலங்கார ஊா்தி அணிவகுத்தபோது பெண் கலைஞா்கள் கரகாட்டம் ஆடிக்கொண்டு சென்றனா். பாரம்பரிய வாத்தியங்களான நாகஸ்வரம், தவில் உள்ளிட்டவற்றையும் பெண் கலைஞா்கள் இசைத்தனா்.

கேரளம், மகாராஷ்டிரம், திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களும் பெண் சக்தியை மையப்படுத்தி அலங்கார ஊா்திகளை வடிவமைத்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.