கேரளத்தில் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதால் சில மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
கேரளத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே இடுக்கி மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தெற்கு ஆலப்புழாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் தவிர அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் தனது முகநூல் பக்கத்தில், விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுரங்கம் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
பத்தனம்திட்டாவில் மழை தீவிரமடைந்துள்ளதால் தாலுகா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் சிறப்பு கட்டுப்பட்டு அறைகள் செயல்படுகின்றன. கோட்டயம் மாவட்டத்திலும் இரவு முழுவதும் இடைவிடாமல் மழைபெய்தது. மழை மேலும் தொடர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை முதல் அதி கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும் என்றும், இன்றும் நாளையும் அதி கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு முதல்வர் பினராய் விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.