மும்பையில் வீடு வாங்கியதன் மூலம், கிரிக்கெட் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளார்.
மும்பையில் 5 படுக்கையறைகள் கொண்ட வீட்டை யாஷ்ஸ்வி சொந்தமாக வாங்கியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக முதல்முறையாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினார்.
சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்து (171 ரன்கள்) வரலாற்று சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும்போதே, சதமடித்ததோடு மட்டுமல்லாமல், மற்றொரு கனவையும் நனவாக்கி இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு உரியவரானார்.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் எளிமையான குடும்பத்திலிருந்து வந்ததால், சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பவது அவரின் நீண்ட நாள் கனவு. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 2 படுக்கையறைகள் கொண்ட வாடகை வீட்டில் தங்கிவந்தனர். சொந்த வீட்டில் குடும்பத்தை அமர வைக்க வேண்டும் என்பதை அவர் தனது குறிக்கோளாக கொண்டிருந்தார்.
தற்போது மும்பையில் 5 படுக்கையறைகள் கொண்ட வீட்டை யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் சொந்தமாக வாங்கியுள்ளார். அவரின் தந்தை யாஷ்ஸ்வியின் நலனுக்காக உத்தரகண்ட்டுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
அதனால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மும்பையிலுள்ள வீட்டிற்கு மாறியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை அவரின் சகோதரர், யாஷஸ்விக்கு அனுப்பியுள்ளார். அதனைக் கண்டு அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சகோதரர் தேஜஸ்வி, வீட்டை மாற்ற வேண்டும் என யாஷஸ்வி தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பான். போட்டியின்போது கூட போன் செய்தால் வீட்டை மாற்றுவது குறித்துதான் அதிகம் பேசுவான். தற்பொது டெஸ்ட் போட்டியின்போதுகூட வீடு மாற்றும் திட்டம் குறித்து கேட்டறிந்தான். அவனுக்கு ஒரே ஒரு ஆசைதான். சொந்த வீட்டில் இருக்க வேண்டும். அவன் எப்படி கஷ்டப்பட்டான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் சொந்த வீட்டின் அருமை தெரிந்தவன். குறிப்பாக மும்பை போன்ற நகரத்தில் வீடு இருக்க வேண்டும் என அடிக்கடி கூறுவான் எனக் குறிப்பிட்டார்.