சர்வதேச முதல் கிரிக்கெட் போட்டியிலேயே இந்தியாவுக்காக விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து வரலாற்று தொடக்கமாக மாற்றிக்கொண்டார்.
யாஷஸ்வியின் முதல் போட்டியைத் தொடர்ந்து, அவரின் தந்தை பூபேந்திர ஜெய்ஸ்வால் மகனின் நலனுக்காக கன்வார் யாத்திரை மேற்கொண்டார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலே சதம் விளாசி யாஷஸ்வி அசத்தியிருக்கிறார். இதன் மூலம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரானார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய யாஷஸ்வி, தனது முதல் சதத்தை பூர்த்தி செய்ததால், அறிமுக போட்டியில் சதம் விளாசிய 17 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
மேலும், மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அறிமுகமாகி சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் யாஷஸ்வி அடைந்தார்.
90 ஆண்டுகால இந்திய கிரிக்கெட் வரலாற்றில், வெளிநாட்டில் அறிமுகப் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையையும் யாஷஸ்வி பெற்றார்.
இந்நிலையில், யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் முதல் சதத்தைத் தொடர்ந்து அவரின் தந்தை பூபேந்திர ஜெய்ஸ்வால் கன்வார் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
மகன் சதமடித்து போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும்போதே மகனின் நலன் வேண்டி யாத்திரை புறப்பட்டதாக கூறப்படுகிறது. மகனுக்கு முழுமையான ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக யாத்திரை புறப்பட்டதாக யாஷஸ்வி குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.