தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம், பாஜகவின் பிரிவுபசார சந்திப்பு என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
தில்லியில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி தலைவருமான அஜித் பவாா் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் குறித்து சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,
'பெங்களூருவில் 27 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்திய தேசிய வளர்ச்சிக் கூட்டணியை (இந்தியா) உருவாக்கியுள்ள அது நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது கூட்டத்தை தில்லியில் நடத்தியது. இது 'இந்தியா' கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றியாகவேப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர்!
பாஜக, விருந்துக்காக தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளனர். உண்மையில் இது பாஜகவின் பிரிவுபசார சந்திப்புக் கூட்டம்.
எதிர்க்கட்சிக் கூட்டணியின் பெயரிலேயே அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ச்சி என்ற பொருள் உள்ளது. இது நம் நாட்டை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு என்பது சோசலிச சித்தாந்தத்தை வலியுறுத்துகிறது. 'இந்தியா' என்ற பெயரைக் கண்டு பாஜக பயந்துவிட்டது. பாஜகவினரே 'இந்தியா' என்ற பெயரைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினர். அந்த பெயரை வைத்து நம்மை பயமுறுத்த நினைத்தனர். ஆனால் இப்போது என்ன நடந்தது? இப்போது இந்தியா என்ற பெயருக்கு பாஜக ஏன் பயப்படுகிறது? இந்தியா என்ற பெயர் அவர்களை அமைதியடையச் செய்துள்ளது என்றால், இந்த முறை மக்கள் அவர்களுக்கு பிரிவுபசாரம் அளிப்பார்கள்' என்று கூறியுள்ளார்.
மேலும், 'பாஜக தலைமையிலான அரசு இந்திய மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்து அதில் எதையும் நிறைவேற்றவில்லை. வளர்ச்சிக்கு இந்த கட்சி உறுதியளித்த நிலையில் நாட்டில் ஒரு வளர்ச்சியும் ஏற்படவில்லை. அவ்வாறெனில் அத்தகைய வளர்ச்சியால் என்ன பயன்? வேலையின்மை மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணமதிப்பிழப்பு என்பது உலகிலேயே மிகப்பெரிய ஊழல்' என்றும் மத்திய பாஜக அரசை கடுமையாகச் சாடினார்.