எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் அலுவல்களும் 8-வது நாளாக இன்று காலை தொடங்கியவுடன் மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை 2 மணிக்கு கூடியவுடன் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ஒளிபரப்பு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிற்பகல் 2 மணிக்கு விவாதம் நடத்த பட்டியலிடப்பட்ட நிலையில், பிரதமர் நேரடியாக விளக்கம் அளிக்கக் கோரி அமளி தொடர்ந்தது.
இதனால், மாநிலங்களவையும் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.