கோவை: மத்திய அரசின் ஊழியர் என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி மறந்து விட்டு முதல்வர் போல் செயல்படக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, தமிழக வரலாற்றிலேயே இரக்கமற்ற மூர்க்கத்தனமான தான்தோன்றித்தனமான ஒரு ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற பெயரிலே இங்கு வந்து ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறார்.
தமிழக முதல்வருக்கு தான் யாரை எந்த துறைக்கு அமைச்சராக்குவது என்ற அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜியின் துறைகளை பிரித்து கொடுத்ததை ஆளுநர் ஏற்காதது அதிக பிரசிங்கி தனமானது மட்டுமல்ல அயோக்கியத்தனமானது.
இதையும் படிக்க | கல்லணை திறந்துவைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!
தமிழகத்தில் ஆட்சியை சீர்குலைக்க எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு மத்திய அரசின், பாஜகவின் உளவாளியாக, ஏஜெண்டாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி, சட்டத்திற்கு விரோதமாக அவர் வகிக்கும் அதிகாரத்திற்கு விரோதமாக எல்லாம் பேசி கொண்டிருக்கிறார். முதல்வரை போல் செயல்படுகிறார். மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தது ஸ்டாலினைத்தானே தவிர ஆர்.என் ரவியை அல்ல. அவர் ஒரு மத்திய அரசின் ஊழியர், முதல்வர் அல்ல.. தான் முதல்வராக தேர்ந்தெடுத்ததைப் போல செயல்படுகிறார்.
மத்திய அரசின் ஊழியர் என்பதை ஆளுநர் மறந்து விடக்கூடாது. மத்தியில் ஆளும் பாஜக அரசு எல்லா இடங்களிலும் பாஜகவை கொண்டு வர முயல்கிறார்கள். ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு சர்வாதிகாரத்தை நரேந்திர மோடி அரசு நிலைநாட்ட நினைக்கிறது அதில் தோற்றுப் போவார்கள் என்று வைகோ தெரிவித்தார்.