அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில் பால்டால் மற்றும் சந்தன்வாரி நகரில் இரண்டு மருத்துவமனைகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்துவைத்தார்.
இந்த இரு மருத்துவமனைகளிலும் 100 படுக்கை வசதிகளுடன் பக்தர்களுக்கு சிகிச்சையளிக்க நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சுகாதார மற்றும் மருத்துவ கல்வி செயலாளர் பூபேந்திர குமார் கூறுகையில்,
ஒவ்வொரு மருத்துவமனையும் கட்டுவதற்கு நிர்வாகம் ரூ.13 கோடி வழங்கியுள்ளது. பால்டால் மற்றும் சந்தன்வாரி ஆகிய இரு இடங்களிலும் 15 நாள்களுக்குள் இந்த மருத்துவமனைகள் கட்டிமுடிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் மருத்துவமனையைக் கட்டி முடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று அவர் கூறினார்.
அமர்நாத் பக்தர்களுக்கு சிறந்த வசதிகளை உறுதி செய்யுமாறு யூனியன் பிரதேச நிர்வாகத்திடம் அவர் கேட்டறிந்தார். இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அமர்நாத் யாத்திரை பஹல்காம் மற்றும் பால்டால் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்தவகையில் இந்தாண்டு யாத்திரையின் முதல் குழு ஜூன் 30 அன்று ஜம்முவில் உள்ள பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து புறப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.