மும்பை: பிறந்த குழந்தைக்கான காப்பீடு என்ற நிலைப்பாடு குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும் என்று தீர்ப்பளித்துள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.
அதன்படி, மும்பையைச் சேர்ந்த பெற்றோருக்கு குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சைக்காக செலவிட்ட ரூ.11 லட்சத்தை அந்த மாதத்திலிருந்து 9 சதவிகித சாதாரண வட்டியை கணக்கிட்டு வழங்குமாறு நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!
காப்பீடு செய்யும் நபர்கள், ஆண்டுதோறும் காப்பீட்டை புதுப்பித்து, அதற்கான தொகையை அளித்து, காப்பீடு தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையோடு இருந்து, நியாயமான காப்பீடு கோரும்போது, அதனை தவிர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பதை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோஷி என்பவர் 2007 முதல் 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு காப்பீடுகளை பல ஆண்டுகளாக புதுப்பித்து வந்துள்ளார். 2018 செப்டம்பரில் அவருக்கு 30 வாரத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த ஆண்டுதான் கூடுதல் தொகையின்றி பிறந்த குழந்தைகளுக்கும் காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து ஜோஷி தனது குழந்தைகளுக்காக செலவிட்ட 11 லட்சத்தை காப்பீட்டு நிறுவனத்திடம் கோரினார். ஆனால் குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு இது பொருந்தாது என்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தை நாடினார். மனுவை விசாரித்து பல மருத்துவர்களின் கருத்துகளை கேட்ட நீதிமன்றம், காப்பீடு செய்தவரின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கும் காப்பீட்டு நிறுவனம், 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து ரூ.11 லட்சத்துக்கு 9 சதவிகித வட்டி கணக்கிட்டு மொத்த தொகையை அளிக்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
தங்களது இரட்டைக் குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்த நிலையில் ஏற்பட்ட மன வருத்தத்தோடு, காப்பீடு நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு கூடுதலாக ஜோஷிக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அனைத்துத் தொகையும் 4 வாரங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.