நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை(ஏப்.14) வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது.
லண்டனில் இந்தியாவை அவமதித்ததற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணிக்கு கூடியது. மீண்டும் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இதையும் படிக்க: குப்பையில்லா தூய்மையான சூழலுக்கு வழிவகுக்கும் உ.பி. அரசு!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி, தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நாடளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.