96 படத்தில் சிலர் எதிர்பார்த்த கிளைமாக்ஸ்.. நடந்திருக்கிறது கேரளத்தில்; ஆனால்?

பழைய காதல் துளிர்விட, முன்னாள் காதலர்கள் இருவர் வீட்டை விட்டு வெளியேறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
96 படத்தில் சிலர் எதிர்பார்த்த கிளைமாக்ஸ்.. நடந்திருக்கிறது கேரளத்தில்; ஆனால்?

கேரளத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளியில் ஒன்றாகப் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, பழைய காதல் துளிர்விட, முன்னாள் காதலர்கள் இருவர் வீட்டை விட்டு வெளியேறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவருடைய குடும்பத்தினரும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அவர்கள் இருவரையும் சைபர் செல் மூலம் கண்காணித்த காவல்துறையினர், இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வழியாக வேளாங்கண்ணி சென்றிருப்பதை கண்டறிந்தனர். அவர்களுக்கு முவட்டுப்புழா காவல்துறையினர், காதல் ஜோடிக்கு சம்மன் அனுப்பியதன் அடிப்படையில், அவர்கள் காவல்நிலையத்தில் ஆஜரானதாக 
தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரிஷா - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தைப் பார்த்த சிலருக்கு இதுபோன்றதொரு கிளைமாக்ஸைதான் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், அப்படி ஒரு சம்பவம் கேரளத்தில் நடந்து தற்போது சமூக ஊடகங்கள் முழுக்க இந்த செய்தியே ஆக்ரமித்துள்ளது.  

எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுப்புழாவில் 35 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 50 வயதினராக இருந்தனர்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த எர்ணாகுளம் மற்றும் இடுக்கியைச் சேர்ந்த முன்னாள் காதலர்கள் இருவர், இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சந்தித்த போது, தங்களது பட்டுப்போன காதல் மீண்டும் துளிர்விட, ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.

பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பாமல் இருவரும் வேளாங்கண்ணி சென்றுள்ளனர். இருவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் இருக்கும் நிலையில், அவர்களைக் காணவில்லை என்று குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், சைபர் பிரிவு காவல்துறையினர் மூலம் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், இவ்விருவரின் குடும்பத்தினரும் கவலை அடைந்திருப்பதோடு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அண்மைக் காலமாக நடைபெற்று வந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இனி தொடர்ந்து நடைபெறுமா? நடைபெற்றாலும் அதில் பங்கேற்க தங்களது வாழ்க்கைத் துணையை நம்பி அனுப்புவார்களா? என்ற கருத்துகளும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com