கர்நாடக தேர்தலையொட்டி பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடியின் மாபெரும் பேரணி முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட மாபெரும் பேரணி பெங்களுருவில் வருகிற மே 6,7 (சனி, ஞாயிறு) அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், மே 7 ஆம் தேதி நீட் தேர்வு இருப்பதால் பேரணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், பிரதமர் மோடியின் பெங்களூரு சாலை பேரணி மே 6 ஆம் தேதியே தொடங்கப்பட உள்ளது.
இதையும் படிக்க | தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு
மே 6 ஆம் தேதி 26 கிலோமீட்டரும் மே 7 ஆம் தேதி காலை 8 கிமீ தூரமும் பேரணி நடைபெறும் என்றும் மே 7ஆம் தேதி காலை 11.30 மணிக்கு பேரணி முடிவடையும் என்றும் பாஜக முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு தெற்கு எம்.பி. தேஜஸ்வி சூர்யா, 'நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதால் பேரணியை முன்கூட்டியே நடத்த கர்நாடக பாஜக பிரிவுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவ மாணவர் கூட சிரமப்படுவதை நான் விரும்பவில்லை என்பது அவரது ஒரு வரி உத்தரவு' என்று குறிப்பிட்டுள்ளார்.