புதுதில்லி: கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் ரயில் பயண டிக்கெட் முன்பு செய்த போதிலும், காத்திருப்புப் பட்டியலில் (வெயிட்டிங் லிஸ்ட்) இருந்ததால் 2.70 கோடிக்கும் அதிகமான பயணிகளின் பயணம் தானாக ரத்தானதாக மத்திய ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
காத்திருப்பு பட்டியல் (வெயிட்டிங் லிஸ்ட்) தொடர்பாக மத்தியப் பிரதேசச்சை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கௌவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய ரயில்வே வாரியம் பதில் அளித்துள்ளது.
அதில், கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில் மொத்தம் 1.06 கோடி பயணிகள் முன்பதிவு பயணச்சீட்டு உறுதியாகாததால் பயணம் தானாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில் 1.76 கோடி பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு செய்துள்ளனர். அதே சமயம், 2.72 கோடி பயணிகள் பயணச் சீட்டை முன்பதிவு செய்திருந்த போதிலும், போதிய இருக்கை வசதி இல்லாததால் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பயணச்சீட்டு உறுதியாகாததால் பயணம் தானாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணச்சீட்டு உறுதியாகாத நிலையில் பயணிகளுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டாலும், பயணிகளுக்கு முன்பதிவு கட்டணமாக ரூ.20 பிடித்தம் செய்யப்பட்ட பின்னரே மீதி தொகை திருப்பி அளிக்கப்படுகிறது.
2014-15 ஆம் ஆண்டில், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டு தானாகவே ரத்து செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1.13 கோடியாகவும், 2015-2016 ஆம் ஆண்டில் 81.05 லட்சமாகவும் இருந்தது. 2016-2017-இல் 72.13 லட்சமாகவும், 2017-18-இல் 73 லட்சமாகவும், 2018-2019-இல் 68.97 லட்சமாகவும் இருந்தது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தேவைக்கேற்ப ரயில்களை இயக்குவதற்கான திறனை அதிகரிக்க முயற்சித்து வருவதாகவும், இதன் மூலம் காத்திருப்பு பட்டியலில் பயணிகள் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றுநோய்க்கு முன்பு, 10,186 ரயில்கள் இயக்கப்பட்டது, இது தற்போது 10,678 ரயில்களாக உயர்ந்துள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.