ஹைதராபாத்தில் உள்ள சித்திப்பேட்டையில், கடந்த அக்டோபர் 30ஆம் தேதியன்று பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகர் ரெட்டி வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் கை குலுக்குவதுபோல் வந்த ஒருவர் அவரைக் கத்தியால் வயிற்றில் குத்தியதில், காயமடைந்த பிரபாகர் ரெட்டியை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரின் ஆதரவாளர்கள் தப்பிச்செல்ல முயன்ற குற்றவாளியைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கட்சி ஆதரவாளர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த குற்றவாளியும் போலீசாரால் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் குணமடைந்தபின், நவ.1ஆம் தேதியன்று குற்றவாளி ராஜூ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் 40 வயதான ராஜூ, மக்களின் கவனத்தைப் பெறவும் பேசுபொருளாகத் தான் மாறுவதற்காகவுமே எம்.பி-யைக் கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கத்தியை வாங்கி வைத்திருந்ததாகவும், இதற்காகவே சூரம்பள்ளி கிராமத்திற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் ராஜூ, போலீசாரால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். ராஜூவின் மீது, கொலை முயற்சிக்காக - ஐபிசி 307ன் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து கத்தி மற்றும் செல்போன் ஆகியவற்றை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த கொலை முயற்சிக்கு பின்னால் வேறு நோக்கங்கள் உள்ளனவா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.