ஞானவாபி மசூதி: அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி

அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிர்வாக முடிவை எதிர்த்து மசூதியை நிர்வகித்து வரும் அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.  
ஞானவாபி மசூதி
ஞானவாபி மசூதி
Published on
Updated on
1 min read

புது தில்லி: 2021 முதல் ஞானவாபி வழக்கை விசாரிக்கும் ஒற்றை நீதிபதி அமர்விலிருந்து நீக்குவது தொடர்பாக  அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிர்வாக முடிவை எதிர்த்து மசூதியை நிர்வகித்து வரும் அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. 

வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் கோயிலை மீட்டெடுக்கக் கோரிய வழக்கின் விசாரணையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தனி நீதிபதி அமர்வு விசாரித்து வந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா கொண்ட அமர்வு, மசூதி நிர்வாகக் குழுவின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவில் தலையிட முடியாது. உயர்நீதிமன்றங்கள், ஒரு நிலையான செயல்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இது நிச்சயம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஞானவாபி மசூதி வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி விசாரித்து வந்த நிலையில், தனி நீதிபதி அமர்விலிருந்து வேறு அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இதையெதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதியின் வளாகத்தில் சிவலிங்கம் போன்ற நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடா்பான வழக்கில் நவம்பா் 6-ஆம் தேதிக்குள் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமா்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஏஎஸ்ஐ தனது ஆய்வை நிறைவு செய்ததாக வாரணாசி நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் இதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க நவம்பா் 17 வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு தொல்லியல் துறை கேட்டுக்கொண்டதன் பேரில் வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே. விஸ்வேஷ் அவகாசம் அளித்து உத்தரவைப் பிறப்பித்தாா்.

மசூதியின் அடித்தளப் பகுதியின் நுழைவாயில் சாவியை வாரணாசி மாவட்ட நீதிபதியிடம் வழங்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில், மசூதியின் நிா்வாகக் குழு நவம்பா் 6-க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை நவம்பா் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com