தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை அமித்ஷா நாளை (நவம்.18) வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்.30-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா சனிக்கிழமை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாரங்கல், நால்கொண்டா, கத்வால் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொள்ள உள்ளார்.
பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு முன்பாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு பாஜகவின் தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிடுகிறார்.
நவம்.30-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, வரக்கூடிய நாட்களில் பாஜக சார்பில் நடைபெறும் கூட்டங்களில் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவதற்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளதாகவும், அவரின் பதிலுக்கு காத்திருப்பதாகவும் தெலங்கானா மாநில பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.