ஆந்திரத்தில் சிறுமியைத் திருமணம் செய்த பள்ளி ஆசிரியர் கைது
ஆந்திரத்தில் 15 வயது சிறுமியைத் திருமணம் செய்ததாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பீமாவரத்தில் உள்ள யந்தாகனி ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் சோமராஜு என்பவர் ஹிந்தி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் முரளி கிருஷ்ணா கூறியதாவது,
“46 வயதான சோமராஜுவுக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் அதே பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமியிடம் நான்கு மாதங்களாக பழகி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது திறன்பேசியையும் அந்த சிறுமியிடம் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் அச்சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். சிறுமியை மூளைச்சலவை செய்து கடந்த நவம்பர் 19-ஆம் தேதி திருமணம் செய்த அவர், அச்சிறுமியை தன்னுடன் இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பிவந்த சிறுமி பெற்றோரிடம் நடந்தவற்றை எல்லாம் கூறியுள்ளார். அதனையடுத்து அச்சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர் சோமராஜுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
மேலும் அவர் மீது ஐபிசி 342, 376, 506 மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.