உ.பி : தலித் சிறுவன் மீது தாக்குதல் - சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்
லக்னோ : உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தலித் பிரிவை சார்ந்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்தநிலையில், உத்தரபிரதேசத்தின் சுஜான்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், 14 வயதான தலித் சிறுவனை தாக்கி சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த சில நாள்களுக்கு முன்பு, அதே கிராமத்தை சேர்ந்த சிலர், சிறுவனை அடித்து துன்புறுத்தியதோடு, சிறுநீர் குடிக்க வற்புறுத்தியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த இருவர், சிறுவனை அடித்து காயப்படுத்தியுள்ளனர் என்பதும், சிறுவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என்பதும் தெரிய வந்தது.
இந்தநிலையில், சிறுவனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் தரப்பில் சிறுவன் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. அதில், “பாதிக்கப்பட்ட சிறுவன் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, அவர்களது குடும்பத்தை சேர்ந்த சிறுமியை குறித்து, அவதூறாக பேசி வந்ததாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், சிறுவன் மற்றும் அவனது நண்பர்கள் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.