ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டாா் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
இச்சம்பவம் குறித்து ஸ்ரீநகரில் செயல்படும் ராணுவத்தின் சினாா் படைப் பிரிவின் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீா் காவல் துறை, உளவுத் துறையினா் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் குப்வாரா மாவட்டத்தின் அருகேயுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றது தடுத்து நிறுத்தப்பட்டது எனப் பதிவிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீா் கூடுதல் காவல் துறை இயக்குநா் விஜய் குமாா் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ‘மச்சில் செக்டாா் பகுதியில் 5 பயங்கரவாதிகள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனா். சோதனை நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ எனப் பதிவிட்டுள்ளாா்.