புதுதில்லி: ஏர் இந்தியா இந்த ஆண்டு, இரண்டு ஏ 350 விமானங்களை சேவையில் இணைக்கும் என்றும், இதற்காக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் 2024 மார்ச் இறுதிக்குள் இதுபோன்ற ஆறு விமானங்களை ஏர் இந்தியா தன்னிடத்தில் வைத்திருக்கும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
டாடா குழுமத்தால் வழிநடத்தப்படும், நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா, தனது விமான சேவையையும், செயல்பாடுகளையும் விரிவுபடுத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 40 ஏ350-900/1000 விமானங்கள் உள்பட 470 விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. இதில் இரண்டு ஏ 350 விமானங்களைச் சேர்ப்பதற்கான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து (டி.ஜி.சி.ஏ) ஏற்பு கடிதம் ஏர் இந்தியா பெற்றுள்ளது. இந்த இரண்டு விமானங்களும் ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின்களால் இயக்கப்படும்.
அதே வேளையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், ஏர் இந்தியா-விடம் மொத்தம் ஆறு ஏ350 விமானங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்திடம் தற்போது 126 விமானங்கள் உள்ளன. இதில் 52 அகலமான போயிங் 787 மற்றும் 777 விமானங்களும் அடங்கும்.
இந்நிலையில் ஜூலை 21 அன்று ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில், ஏர் இந்தியா தலைவர் காம்ப்பெல் வில்சன் மார்ச் 2024 க்குள் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் நவீன இருக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு அமைப்புகளைக் கொண்டிருக்கும் என்றார்.
அதே வேளையில், இந்த நிதியாண்டின் இறுதிக்குள், ஆறு புதிய ஏ 350 ரக விமானங்களும், 5 குத்தகைக்கு எடுக்கப்பட்ட பி -772 எல்ஆர் ரக விமானங்கள் மற்றும் 9 பி -777 ஈஆர் ரக விமானங்களுடன் இனைத்து ஏர் இந்தியாவின் சேவையின் ஒரு வருடத்திற்குள் 30 சதவீதம் வளர்ந்திருக்கும் என்றார்.
ஏர் இந்தியா ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் 470 விமானங்களை ஆர்டர் செய்துள்ள நிலையில், ஏர்பஸ் நிறுவன ஆர்டரில் 210 ஏ 320 / 321 நியோ / எக்ஸ்எல்ஆர் மற்றும் 40 ஏ 350-900 / 1000 ஆகியவை அடங்கும். அதே நேரத்தில் போயிங் நிறுவன ஆர்டரில் 190 737-மேக்ஸ், 20 787எஸ் மற்றும் 10 777எஸ் ஆகியவை அடங்கும்.