ஜி20 உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் தில்லி சென்றடைந்தார்.
இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தில்லியில் பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக தலைநகர் தில்லியில் கூடியுள்ளனர்.
மாநாட்டையொட்டி, உலகத் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பாரத மண்டப வளாகத்தில் சனிக்கிழமை இரவு விருந்து அளிக்கவுள்ளார். முன்னாள் பிரதமா்கள், மாநில முதல்வா்களுக்கும் இரவு விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றார். தில்லி வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ் விஜயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று மாலை குடியரசுத் தலைவர் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்று, நாளை மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் சென்னை திரும்புகிறார்.