நிஃபா வைரஸ்: பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!
நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரளத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவமனை பணியாளர்கள் பிபிஇ கிட் அணிந்து பணிபுரியவும் கேரள சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
நிஃபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 16 குழுக்களை அமைத்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் நிஃபா வைரஸ் என சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் கேரளத்தில் 2 பேர் நிஃபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்ததாக அறிவித்துள்ளார். மேலும், மாநில அரசுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதற்காக மத்திய சுகாதாரத் துறை உதவும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நிஃபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிய கேரள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.