பால்கர்/தானே: மகாராஷ்டிரத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வின்போது இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில், இருவரை காணவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சதுர்த்தி விழாவைத் தொடர்ந்து விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். நேற்று (புதன்கிழமை) இரவு வாடா தாலுகாவின் கொன்சாய் கிராமத்தில் உள்ள ஏரியில் விநாயகர் சிலை கரைப்பின் போது ஜகத் நாராயண் மவுரியா(38) மற்றும் சூரஜ் பிரஜாபதி(25) ஆகியோர் நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களின் உடல்களை தீயணைப்பு மற்றும் நீச்சல் வீரர்கள் இன்று மீட்டனர் என்று காவல்துறை கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தானே மாவட்டம் முழுவதும், பொது இடங்களில் நிறுவப்பட்ட 18 சிலைகள் உள்பட 43,000 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் 10 நாள் திருவிழாவின் ஒன்றரை நாட்களுக்குப் பிறகு கரைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தானே நகரில் மட்டும் 11,910 கணபதி சிலைகள் கரைக்கப்பட்டதாக மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவர் யாசின் தாட்வி தெரிவித்தார். இதனிடையே, அண்டை மாவட்டமான பால்கர் மாவட்டத்தில் 4,500 சிலைகள் மிகுந்த பக்தியுடனும், மத எழுச்சியுடனும் கரைக்கப்பட்டன.
யானைத் தலை கடவுளான விநாயகரிடமிருந்து விடைபெறுவதற்காக நீர் நிலைகளில் செல்லும்போது மக்கள் பாடல்கள், இசை மற்றும் மேளதாளங்கள் முழங்க நடனமாடினர்.