புதுதில்லி: உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் 70 பரிந்துரைகள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள நிலையில், நீதிபதிகளின் நியமனத்தில் நிலவும் தாமதம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் என்ற அமைப்பை சிதைப்பதும், அழிப்பதும் மத்திய அரசின் நோக்கமா? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் 70 பரிந்துரைகள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள நிலையில், ‘நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்படும் திறன்மிக்க வழக்குரைஞா்கள், நிலுவைப் பிரச்னையால் தங்கள் பெயா்களை திரும்பப் பெறுகின்றனா்; இது மிகவும் கவலைக்குரியது’ என்று நீதிபதிகளின் நியமனத்தில் நிலவும் தாமதம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் என்ற அமைப்பை சிதைப்பதும், அழிப்பதும் மத்திய அரசின் நோக்கமா? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவில்,
உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைக்கும் நியமனங்களை வழங்க மறுத்து, நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் மத்திய அரசு அழித்து வருகிறது.
பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட 70 பரிந்துரைகள் மத்திய அரசிடம் பல மாதங்களாக நிலுவையில் இருப்பது ஏன்?
அரசாங்கத்தின் நோக்கங்கள் நேர்மையாக இருந்தால், பரிந்துரைகளில் 'நிலுவையில்' உள்ளது ஏன்?
உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட சட்டம் இருக்கும் வரை, கொலீஜியத்தின் பரிந்துரைகளின்படி நியமிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது, குறிப்பாக கொலீஜியத்தால் மீண்டும் வலியுறுத்தப்படும் போது நியமனங்களை வழங்க மறுத்து, ஒருவரை விட மற்றொருவரை தேர்வு செய்வதன் மூலம், அரசாங்கம் நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் அழித்து வருகிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.