வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்(98) வயதுமூப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலை 11.20 மணிக்கு காலமானார்.
இதையும் படிக்க | பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன்ஜி மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில், விவசாயத்தில் அவர் செய்த திருப்புமுனையான பணி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது, நம் நாட்டிற்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது.
விவசாயத்தில் ஆற்றிய புரட்சிகரப் பங்களிப்புகளுக்கு அப்பால், அவர் புதுமையின் எடுத்துக்காட்டாகவும், பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, எண்ணற்ற விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் மீது அழியாத முத்திரையைப் பதித்துள்ளது.
டாக்டர் சுவாமிநாதனுடனான என் உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். இந்தியா முன்னேற்றம் காண வேண்டும் என்ற அவரது ஆர்வம் முன்னுதாரணமானது.
அவரது வாழ்க்கையும் பணியும் வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார்.