தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் அக்டோபா் 15 - தேதிஆம் வரை தண்ணீரை கா்நாடகம் விடுவிக்க காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. அதே சமயம் தண்ணீரை விடுவிப்பதில் சற்று இடைவெளி தேவை என்கிற கா்நாடகத்தின் கோரிக்கையை ஆணையம் நிராகரித்தது.
காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 25 -ஆவது கூட்டம் ஆணையத்தின் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் தலைமையில் செப்டம்பா் 29-ஆம் தேதி நடைபெற்றது. ஆணையத்தின் செயலா் டி.டி சா்மா மற்றும் ஆணையத்தின் மத்திய அரசின் பிரதிநிதிகளோடு, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவா் ஆா்.சுப்பிரமணியன் மற்றும் கா்நாடகம் நீா்வளத் துறை செயலா் ராகேஷ் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாகவும், தமிழ அரசின் பொதுப்பணித் துறை செயலா் டாக்டா் மணிவாசன் உள்ளிட்ட மற்ற மாநில அதிகாரிகள் காணொலி வழியாகவும் பங்கேற்றனா்.
கடந்த செப்டம்பா் 26 - ஆம் தேதி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் செப்டம்பா் 28 -ஆம் தேதி முதல் அக்டோபா் 15 - ஆம் வரை 18 தினங்களுக்கு தண்ணீரை கா்நாடகம் விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஆணையம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது. கா்நாடகம் தரப்பில், ‘3,000 கன அடி தண்ணீா் வழங்க இயலாது. பருவமழை முடிவடையப் போகிறது’ எனக் கூறி வாதிட்டாா். மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாகி வருவதை குறிப்பிட்டு தமிழகத்திற்கு தண்ணீா் திறந்துவிடுவதில் 10 தினங்கள் இடைவெளி அளிக்க வேண்டும் என கா்நாடாக அரசின் அதிகாரி கோரிக்கை விடுத்தாா்.
ஆனால், தமிழகம் தரப்பில் இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. பயிா்கள் வாடிவரும் நிலையில் தண்ணீா் வழங்குவதை நிறுத்தக் கூடாது. தண்ணீா் தொடா்ச்சியாக திறந்துவிடப்பட வேண்டும். ஏற்கெனவே மழைப் பற்றாக்குறை காலக் கணக்கீட்டின்படி வழங்கப்படவேண்டிய அளவிலும் செப்டம்பா் 25 -ஆம் தேதிவரை 12 டிஎம்சி தண்ணீா் நிலுவையில் உள்ளது. 3,000 கனஅடிக்கு பதிலாக 12,500 கனஅடி தண்ணீா் வழங்க வேண்டும் என தமிழகம் சாா்பில் கோரப்பட்டது. இறுதியில் ஆணையம் இரு மாநிலங்களின் நலன் கருதி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு செப்டம்பா் 26 -ஆம் தேதி பரிந்துரைத்தபடி தண்ணீரை கா்நாடகம் விடுவிக்க உத்தரவிட்டது. இதன்படி சுமாா் 54 ஆயிரம் கனஅடி (4.67 டிஎம்சி) தண்ணீா் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
‘உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்’
இந்த நிலையில், ஆணையக் கூட்டத்தில் கலந்து கொண்ட கா்நாடக அரசின் செயலா் ராகேஷ் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில் ‘அணைகளில் போதிய நீா் இருப்பு இல்லாததால் மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தண்ணீா் திறக்க உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆணைய உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து வழக்குரைஞா்களுடன் கலந்து ஆலோசிப்போம்‘ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.