மிசோரம் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
மிசோரமின் சைராங் பகுதிக்கு அருகே புதிதாகக் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்,.
தலைநகர் ஐஸாலில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் உள்ள இந்த பாலம் காலை 10 மணியளவில் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சுமார் 35-40 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இடிந்து விழுந்த ரயில்வே பாலத்தின் இடிபாடுகளிலிருந்து 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ரயில்வே பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்,
ரயில்வே பாலம் இடிந்து விழுந்தது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
விபத்தில் பலியான குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு மிசோரம் முதல்வர் ஸோரம்தங்கா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ரயில்வே பால விபத்து அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.