வளாக நேர்முகத் தேர்வின் முதல் நாளே குவாஹாட்டி ஐஐடி மாணவர்கள் 164 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாக ஐஐடி தெரிவித்துள்ளது. அவர்களில் 11 பேருக்கு ரூ.1 கோடி ஆண்டுச் சம்பளத்திற்கு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளன.
ஐஐடி அறிக்கையின்படி, வெள்ளிக்கிழமை, 59 நிறுவனங்கள் இந்த நேர்முகத் தேர்வின் முதல் நாளில் கலந்து கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு 160 மாணவர்கள் மின்னியல், மின்பொறியியல் உள்ளிட்ட கோர் துறைகள், மென்பொருள், தொழில்துறை என 46 வெவ்வேறு நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆண்டுக்கான நேர்முகத் தேர்வில் முன்கூட்டிய வளாக வேலைவாய்ப்பை 214 பேர் ஏற்கெனவே பெற்றுள்ள நிலையில் இப்போது நடந்து வரும் நேர்முகத் தேர்வில் 164 பேர் வெற்றிகரமாக வேலைவாய்ப்பை ஈட்டியுள்ளனர்.
கூகுள், மைக்ரோசாஃப்ட், பிராமல், குவால்காம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தத் தேர்வில் மாணவர்களிடம் நேர்முகத் தேர்வை நடத்தின.
இது குறித்து பேராசிரியர் லலித் மோகன் பாண்டே தெரிவிக்கும்போது, “உலகளாவிய மந்தநிலையைத் தாண்டியும் ஐஐடி மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் விகிதம் நிலையாகவே உள்ளது. கடுமையான பயிற்சியின் மூலமாக மாணவர்கள் நிறுவனங்களின் தேவைக்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டு வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வைரல் செல்ஃபி: மோடியின் பதிவு!
இந்தக் கல்வியாண்டில் வெவ்வேறு துறையைச் சார்ந்த 1491 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.