ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு, இடுப்பு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ராஷ்ட்ர சமிதி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகர் ராவுக்கு அறுவைசிகிச்சை முடிந்து அவர் நலமாக இருப்பதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தசாஜு ஸ்ரவன் இது பற்றி கூறுகையில், சந்திரசேகர ராவுக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மிகவும் சிக்கலான இந்த அறுவைசிகிச்சையை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மருத்துவர்கள் செய்து முடித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. மிக்ஜம் வெள்ள நிவாரணம் ரூ.6 ஆயிரம்: ஸ்டாலின் அறிவிப்பு
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில், அவரது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அதற்கு உடனடியாக இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நேற்று அவரது மகன் வெளியிட்டிருந்த பதிவில், சந்திரசேகர் ராவுக்கு இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அவர் விரைவாக குணமடைய வேண்டும் என்று பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டு, மருத்துவமனை அறிக்கையையும் இணைத்திருந்தார்.
இதையும் படிக்க.. பெண் மருத்துவர் தற்கொலைக் கடிதத்தில் பெயரைக் குறிப்பிடவில்லையா?
தெலங்கானாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, டிசம்பர் 3ஆம் தேதி தெலங்கானா முதல்வர் பதவியை சந்திரசேகர் ராவ் ராஜிநாமா செய்திருந்தார். இதையடுத்து, எர்ரவெள்ளியில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்து கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் சந்தித்து வந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் உள்ள கழிப்பறையில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.