லக்னௌ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது அடுத்த அரசியல் வாரிசாக தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார். இருப்பினும், இதுகுறித்த கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
பகுஜன் சமாஜ் கட்சியின் ஷாஜஹான்பூர் மாவட்டத் தலைவர் உதய்வீர் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது அடுத்த அரசியல் வாரிசு தனது மருமகன் “ஆகாஷ் ஆனந்த்” என்று அறிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு கட்சி தயாராவது குறித்து ஆராய்வதற்காக மாயாவதி தலைமையில் மாநிலத் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்தியக் கூட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த கட்சித் தலைவர்களுக்கு முன்னிலையில் தனக்கு பிறகு தனது அரசியல் வாரிசாக ஆனந்த் இருப்பார் என்று மாயாவதி அறிவித்தார் என்று சிங் கூறினார்.
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் தவிர, நாடு முழுவதும் கட்சி பலவீனமாக உள்ள இடங்களில் வலுப்படுத்தும் பொறுப்பை கவனித்துக்கொள்வார் என்று மேலும் அவர் கூறினார்.
2019 மக்களவைத் தேர்தலின் போது கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட ஆகாஷ் ஆனந்த் தற்போது கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறாா்.
இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் விஸ்வநாத் பால் கூறுகையில், மாயாவதியின் அறிவிப்பைத் தொடர்ந்து கட்சிக்கு இளம் தலைவர் ஒருவர் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.இதனைத் தொடர்ந்து பலவீனமாக உள்ள மாநிலங்களில் கட்சி அமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆனந்த் கவனம் செலுத்துவார் என்று கூறினர்.