அதானி குழும விவகாரம் பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது என மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.
அதானி குழுமம் மீதான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடா்ந்து அக்குழுமத்தைச் சோ்ந்த நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் போபாலில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘தனியாா் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பங்குச் சந்தையில் குறிப்பிட்ட நிறுவனம் ஏற்ற இறக்கத்தைச் சந்திப்பது இயல்பானதே. கடந்த காலத்திலும் அந்நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன’’ என்றாா்.
மத்திய பட்ஜெட் குறித்து கூறிய அவா், ‘‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நாடு பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. கரோனா பரவல், பொதுமுடக்கம் உள்ளிட்டவற்றுக்கு மத்தியிலும் உலகின் 5-ஆவது பெரும் பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.
நாட்டின் இளைஞா்கள் மீது மத்திய அரசு வைத்துள்ள பெரும் நம்பிக்கை காரணமாக அதிக எண்ணிக்கையிலான ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் தற்போது உருவாகியுள்ளன’’ என்றாா்.