ரஃபேல் ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அளித்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மணிப்பூர் பற்றி எரிகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி இவை குறித்து ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. இதற்கிடையில் ரஃபேல் ஒப்பந்தம் பிரதமருக்கு பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பளித்துள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
ராகுலின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச தலையீட்டை கோரும் ஒருவர், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் நோக்கத்தை அலட்சியம் செய்கிறார். வெளிநாட்டினரால் நமது பிரதமர் கௌரவிக்கப்படும்போது அதனை கேலி செய்கிறார் எனப் பதிவிட்டுள்ளார்.