இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படத் துவங்கியது.
ரயில்களில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி (https://www.irctc.co.in/) இன்று(வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் முடங்கியது. ரயில்வேயின் மொபைல் செயலியான 'ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்' செயலியும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
இதனால் இன்று காலை, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இணையதளம் முடங்கியுள்ளதாகவும் டிக்கெட் முன்பதிவு செய்ய பின்னர் முயற்சிக்கவும் என்றும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது!
மேலும், தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்பக் குழுவினர் இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் முன்பதிவு தொடங்கும் என்றும் ஐஆர்சிடிசி எக்ஸ் வலைத்தளத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு பிற்பகல் 2 மணியளவில் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.