தெலங்கானா மாநிலத்தில் வாக்குப் பதிவு நவ.30 அன்று நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில செய்தி நாளிதழ்களில் கர்நாடக அரசின் சாதனைகள் விளம்பரமாக வெளியிடப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், கர்நாடக அரசு வெளியிட்ட இந்த விளம்பரம் தேர்தல் விதிமுறைகளை எந்தவிதத்திலும் மீறவில்லை, ஏனெனில் அதில் வாக்கு சேகரிக்கும் செய்தி எதுவுமில்லை என தேர்தல் ஆணையத்தின் கடிதத்துக்குப் பதிலளித்துள்ளார், அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.
திங்கள்கிழமை, பாஜக தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து புகாரளித்திருந்தது. காங்கிரஸ், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாகவும் மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறி தேர்தலை நோக்கமாகக் கொண்டு இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியது.
இதையும் படிக்க: தெலங்கானா தேர்தல்: நவ.29, 30ல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
இது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அதே நாளில் கடிதம் அனுப்பிய நிலையில் டி.கே.சிவகுமார் பேசும்போது, “நாங்கள் எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை. கர்நாடக அரசு யாருக்கு ஆதரவாகவும் வாக்குகள் கேட்கவில்லை. எனில் எந்தவிதத்தில் விதி மீறலாகும்? கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா எந்த மாநிலமாக இருந்தால் என்ன... நாங்கள் என்ன செய்துள்ளோம் என மக்களுக்கு அறிவித்தோம். எங்கள் (காங்கிரஸ்) கட்சிக்கோ அல்லது வேறு யாருக்குமோ வாக்கு சேகரிக்கும் வகையில் அதை வெளியிடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.