மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் இன்று (செப்.20) நிறைவேறியது.
இந்த மசோதாவுக்கு மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான வாக்குகள் ஆதரவாக கிடைத்துள்ளன. இதன்மூலம் பல ஆண்டுகளால நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுகீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கட்ந்த 18ஆம் தேதி ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று (செப். 19) மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார்.
புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமைந்தது.
தொடர்ந்து இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாஜக உறுப்பினர்கள் பதிலளித்து பேசினர்.
அதனைத் தொடர்ந்து மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 456 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதால், மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை எனும் நிலையில், வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்றதால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது.
மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி மகளிர் இடஒதுக்கீடுக்கு எதிராக வாக்களித்தார். முஸ்லீம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதனை நிராகரித்ததால், அவர் இம்மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார்.
அவரைத் தொடர்ந்து பிரேம்சந்திரன் என்பவரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அதனைத் திரும்பப் பெற்றார்.
இதனால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரான வாக்கு ஒன்றாக குறைந்தது.