அரசியல்வாதி கொலை செய்தால் கைது செய்யாமல் இருக்க முடியுமா? அமலாக்கத் துறை
அரசியலில் இருக்கும் ஒருவர், தேர்தலுக்கு இரண்டு நாள்கள் முன்பு கொலை செய்தால் கைது செய்யாமல் இருக்க முடியுமா என அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியிருக்கிறது.
அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், உடனடியாக தன்னை விடுவிக்கக் கோரியும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடர்ந்த மனு மீது தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் நிறைவில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது தில்லி உயர் நீதிமன்றம்.
முன்னதாக, விசாரணையின்போது, தேர்தல் நேரத்தில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியாமல், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மீது அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருக்கும் அமலாக்கத்துறை, தில்லி கலால் கொள்கை முறைகேட்டில், அரவிந்த் கேஜரிவால்தான் முக்கியக் குற்றவாளி, குற்றச்செயலில் முதன்மையாக இருந்து செயல்பட்டவர் எனறும் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து, அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு 2 நாள்கள் முன்பு ஒரு கொலை செய்தால், அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? என அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. மேலும், நீதிமன்றத்தில், அரவிந்த் கேஜரிவால் தவறான தகவல்களை அளிக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இந்த முறைகேடு வழக்கில், எங்களிடம் வாட்ஸ்-ஆப் பேச்சுகள், ஹவாலா செயல்பாடகள் போன்ற ஆதாரங்கள் உள்ளன. நாங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. எங்களிடம் தேவையான அளவுக்கு வருமானவரித்துறை தரவுகளும் இருக்கின்றன என்று அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.
மதுபான (கலால்) கொள்கை தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது.
அமலாக்கத் துறையின் காவல் முடிவடைந்ததையடுத்து, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் கேஜரிவால் கடந்த திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். விசாரணைக்கு கேஜரிவால் ‘முற்றிலும் ஒத்துழைக்கவில்லை’ என்று கூறி அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க அமலாக்கத் துறை கோரியது. இதையடுத்து, கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நகர நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து கேஜரிவால் திகாா் சிறையில் அடைக்கப்பட்டார்.