புது தில்லி: நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி கோரி ‘சுவிதா’ வலைதளத்தில் இதுவரை 73,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
‘சுவிதா’ வலைதளம் என்பது தோ்தல் பிரசார நடைமுறைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடம் இருந்து அனுமதிகள் மற்றும் செயல்முறையை நெறிப்படுத்த இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொழில்நுட்ப தீர்வாகும். வலைதளம் மூலம் அளிக்கப்படும் அனுமதி குறித்த தரவுகள், தோ்தல் செலவினங்களை ஆராய்வதற்கு மதிப்புமிக்க ஆதாரமாகவும் செயல்படுகிறது.
தேர்தல் அறிவிப்புகள் வெளியான 20 நாள்களில் ‘சுவிதா’ வலைதளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து 73,379 விண்ணப்பங்கள் வந்துள்ளன, அவற்றில் 44,626 விண்ணப்பங்கள் (60 சதவீதம்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 11,200 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 15 சதவீதம் என்றும், 10,819 விண்ணப்பங்கள் செல்லாதவை அல்லது நகல் என ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை வந்துள்ள விண்ணப்பங்களின்படி மீதமுள்ள விண்ணப்பங்கள் செயலாக்கத்தில் உள்ளன.
"அதிகபட்சமாக தமிழ்நாட்டில் இருந்து 23,239 விண்ணப்பங்களும், அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம்(11,976), மத்தியப் பிரதேசம்(10,636) விண்ணப்பங்களும், குறைந்தபட்ச விண்ணப்பங்கள் சண்டிகர் (17), லட்சத்தீவு (18) மற்றும் மணிப்பூர் (20) ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன," என்று தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
பிரசார பேரணிகளை ஏற்பாடு செய்தல், அதற்கான இடங்களை முன்பதிவு செய்தல், தற்காலிக கட்சி அலுவலகங்களைத் திறப்பது, வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தல், ஹெலிகாப்டா்கள் மற்றும் ஹெலிகாப்டா் இறங்குதளங்களைப் பயன்படுத்துதல், வாகனங்களுக்கான அனுமதி பெறுதல் மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் போன்றவற்றுக்கான அனுமதிகளை ‘சுவிதா’ வலைதளம் வழங்குகிறது.
இந்த வலைத்தளம் தேர்தல் செயல்பாட்டின் செயல்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்காளர்களைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் தேர்தல் பிரச்சாரக் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விண்ணப்பங்களின் நிகழ்நேர கண்காணிப்பு, அனுமதி புதுப்பிப்புகள், மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தொடர்புகொள்வது என பலவிதமான அனுமதி கோரிக்கைகளை வெளிப்படையாக வழங்குகிறது.
543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 16-ஆம் தேதி வெளியானது.