தில்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன்பு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி தேர்தல் ஆணையம் முன்பு அமைதியான வழியில் 24 மணிநேர போராட்டத்தில் திரிணமூல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் புகாரளிக்கப்பட்டது. அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் எம்.பி.க்களும் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து தில்லி தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த 10 எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட திரிணமூல் எம்.பி. டோலா சேனாவை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
இது தொடர்பாக பேசிய அவர், என்.ஐ.ஏ., சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை தலைமை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். இதனை வலியுறுத்தி 24 மணிநேர அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் எனக் கூறினார்.