தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை செய்யவுள்ளதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் செளரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு விசாரணையில், அமலாக்கத் துறையால் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது அல்ல என்பதே நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது. அவரை நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதும் சட்டவிரோதமல்ல என்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த ஷர்மா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தில்லி அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான செளரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் செளரவ் பரத்வாஜ் பேசியது:
“கலால் கொள்கை வழக்கானது நாட்டின் மிகப்பெரிய அரசியல் சதி என்று சொல்லலாம். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் ஒரு ரூபாய்கூட இந்த வழக்கில் மீட்க முடியவில்லை.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் உடன்பாடு இல்லை. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடவுள்ளோம். உச்சநீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. சஞ்சய் சிங்குக்கு கிடைத்ததை போன்று அரவிந்த் கேஜரிவாலுக்கும் தீர்ப்பு கிடைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, தோ்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு முரணானது என்று கூறி, தில்லி உயா்நீதிமன்றத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதி ஸ்வா்ண கந்த ஷா்மா முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜூவும், கேஜரிவால் தரப்பில் அபிஷேக் சிங்வியும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.