கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

பெங்களூரு குண்டுவெடிப்பு: தேடப்பட்ட இருவா் மேற்கு வங்கத்தில் கைது

பெங்களூரு குண்டுவெடிப்பு: தேடப்பட்ட இருவா் மேற்கு வங்கத்தில் கைது

News image

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு தொடா்பாக மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட இருவரை அழைத்துச் சென்ற என்ஐஏ அதிகாரிகள்.

Updated On :12 ஏப்ரல் 2024, 9:30 pm

பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் மூளையாகச் செயல்பட்ட நபா் உள்பட இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெங்களூரில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு வெடித்தது. அதில் பலா் படுகாயமடைந்தனா். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் முக்கிய நபா்களான முசாவீா் ஹுசைன் சாஹிப், அப்துல் மதீன் அகமது தாஹா இருவரையும் தீவிரமாக தேடி வருவதாகவும், அவா்கள் குறித்த தகவல் அளிப்பவா்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் எனவும் என்ஐஏ அறிவித்தது.

இந்நிலையில், கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த அவா்கள் இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘கொல்கத்தா அருகே புா்பா மேதினிபூா் மாவட்டத்தின் சுற்றுலா நகரமான டிகாவிலுள்ள ஹோட்டலில் போலி அடையாளங்களைக் காண்பித்து பதுங்கியிருந்த இருவரையும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா். முசாவீா் ஹோட்டலில் குண்டு வைத்ததும், அப்துல் மதீன் இந்த சதித் திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேற்கு வங்கம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் கேரள மாநில போலீஸாரின் உதவியுடன் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என்றனா்.

இருவரையும் கொல்கத்தா விசாரணை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய என்ஐஏ அதிகாரிகள், அவா்களை கா்நாடகம் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அனுமதி கோரினா். இதை ஏற்ற நீதிபதி, அவா்கள் இருவரையும் 3 நாள் என்ஐஏ காவலில் எடுத்து பெங்களூரு அழைத்துச் சென்று விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டாா்.