புதுதில்லியில் பாஜக தலைமையகத்தில் இன்று(ஏப். 14) அக்கட்சியின் தோ்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். ‘பிரதமர் மோடியின் கேரண்டி 2024’ என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று(ஏப். 14) வெளியான நிலையில், இந்த தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியிருப்பதாவது,
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தப் போவதாகவும் கூறியிருந்தார். அதற்கான சட்ட உத்தரவாதத்தையும் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், அவர் தனது பதவிக்காலத்தில் அப்படியெதுவும் செய்யவில்லை. நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பெரிய பணி எதையும் அவர் தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை.
இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். விலைவாசி உயருகிறது. மோடிக்கு விலைவாசி உயர்வை பற்றியோ, வேலையில்லாத் திண்டாட்டத்தை பற்றியோ கவலையில்லை.
இந்த 10 ஆண்டுகளில் மோடியால் ஏழைகளுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை. மோடியின் தேர்தல் அறிக்கையை நம்பக் கூடாது. இதன்மூலம், மக்களுக்கான நல்ல திட்டம் எதுவுமில்லை என்பது நிரூபனமாகியுள்ளது என்று பாஜக தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார்.